ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
Transliteration
aatrin ozhukki aRanizhukkaa ilvaazhkkai
noRpaarin noanmai udaiththu.
🌐 English Translation
English Couplet
Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.
Explanation
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
2 மணக்குடவர்
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.
3 பரிமேலழகர்
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
ஆற்றின் ஒழுக்கி - தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் அறத்தினின்று தவறாத, இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை யுடையது. பசி தகை முதலிய இடையூற்றை நீக்கலின் 'ஆற்றினொழுக்கி' என்றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் காத்துத் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியை மட்டுங் காப்பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பார் என்பது ஆகுபொருட்சொல்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தவம் செய்வோரை நன்னெறியிலே நடத்திச் சென்று அறத்தினின்றும் நீங்காத இல்லறம், நோன்பு நோற்றுத் தவம் செய்வோரது நிலைமையையும் விடப் பெருமையினை உடையதாகும்.
6 சாலமன் பாப்பையா
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.
7 கலைஞர் மு.கருணாநிதி
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
வாழ்வின் முறை அறிந்து வாழ்ந்து அறத்திற்கு கேடு செய்யாத குடும்ப வாழ்கை உண்மையறிய முறைசெய்வதைவிட முறையானது.
9 புலியூர்க் கேசிகன்
பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்.
More Kurals from இல்வாழ்க்கை
அதிகாரம் 5: Kurals 41 - 50
Related Topics
Because you're reading about Family Life