அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
Transliteration
aLavaRinthu vaazhaadhaan vaazhkkai uLapoala
illaakith thoandraak kedum.
🌐 English Translation
English Couplet
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.
Explanation
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
2 மணக்குடவர்
தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
3 பரிமேலழகர்
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும். (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில் ; உளபோல இல் ஆகித்தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப்பொய்த்தோற்றமும் இல்லாது அழியும் . அளவறிந்து வாழ்தலாவது , செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல் . தொடக்கத்திற்கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி 'என்றார் . "முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே." (புறம் . 110) என்பது ஒருவாறு இக்குறட்கு எடுத்துக்காட்டாம் .
5 சாலமன் பாப்பையா
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.
7 சிவயோகி சிவக்குமார்
எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்கை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.
More Kurals from வலியறிதல்
அதிகாரம் 48: Kurals 471 - 480