Kural 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

amizhdhinum aatra inidhaedham makkaL
siRukai aLaaviya coozh.

🌐 English Translation

English Couplet

Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd.

Explanation

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

2 மணக்குடவர்

இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.

3 பரிமேலழகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம். தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது. "படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188) "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.) என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தமது மக்கள் சிறு கைகளால் பிசைந்து சோறானது சுவையான அமிழ்தத்தினையும் விட மிகவும் இனிமையானதாக இருக்கும்.

6 சாலமன் பாப்பையா

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

7 கலைஞர் மு.கருணாநிதி

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

8 சிவயோகி சிவக்குமார்

அமிழ்த்திவிட சிறந்த சுவை தன்குழந்தை சின்ன கைகளில் கரைத்த கூழ்.

9 புலியூர்க் கேசிகன்

தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

More Kurals from புதல்வரைப் பெறுதல்

அதிகாரம் 7: Kurals 61 - 70

Related Topics

Because you're reading about Parenting & Children

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature