அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
Transliteration
anbakath thillaa uyirvaazhkkai vanpaaRkaN
vatral marandhaLirth thatru.
🌐 English Translation
English Couplet
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
Explanation
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert,
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
2 மணக்குடவர்
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
3 பரிமேலழகர்
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும். நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.
6 சாலமன் பாப்பையா
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
7 கலைஞர் மு.கருணாநிதி
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
8 சிவயோகி சிவக்குமார்
அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை கடினமான பாறையில் வெப்பத்தில் மரம் துளிர்வதை போன்றது.
9 புலியூர்க் கேசிகன்
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்.
More Kurals from அன்புடைமை
அதிகாரம் 8: Kurals 71 - 80
Related Topics
Because you're reading about Love & Compassion