Kural 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

anichchamum annaththin thooviyum maadhar
atikku nerunjip pazham.

🌐 English Translation

English Couplet

The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.

Explanation

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

2 மணக்குடவர்

அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.

3 பரிமேலழகர்

(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும். (முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

( உடன் போக்குரைத்த தோழிக்கு அதனருமை கூறிமறுத்தது . ) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - அறிஞரால் மென்மைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்சமலரும் ஒதி மத்தின் நொய்ய துய்முடியும் கூட ; மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - என் காதலியின் மெல்லிய உள்ளங்கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே . இத்தகைய மென் பாதத்தினள் கூர்ம் பருக்கைக் கற்களும் நீள்வேல் முள்ளும் நெடுகலும் பரவிக்கிடக்கும் வெஞ்சுரத்தை எங்ஙனங் கடப்பாள் ? ஆதலால் அக்கருத்தை விட்டுவிடு என்பது குறிப்பு . இது உடன்போக்கு மறுத்தலாயினும் , தலைமகளின் அடிநலத்தை யெடுத்துக் கூறுதலால் , இதுவும் நலம் புனைந்துரைத்தலேயாம் , பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக் கனிபோலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலின் ' பழம் ' என்றார் . இக்குறளிலுள்ள அணி உயர்வுநவிற்சி .

5 சாலமன் பாப்பையா

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

7 சிவயோகி சிவக்குமார்

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போல் வலி உண்டாக்கும்.

8 புலியூர்க் கேசிகன்

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!

More Kurals from நலம்புனைந்துரைத்தல்

அதிகாரம் 112: Kurals 1111 - 1120

Related Topics

Because you're reading about Praising Beauty

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature