அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.
Transliteration
anpaRivu aaraaindha solvanmai thoodhuraippaarkku
indri yamaiyaadha moondru.
🌐 English Translation
English Couplet
Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.
Explanation
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
2 மணக்குடவர்
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
3 பரிமேலழகர்
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அன்பு-தம் அரசனிடத்து அன்புடைமையும்; அறிவு-தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்; ஆராய்ந்த சொல் வன்மை-செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட் கொழுமையுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்தமைத்துக் கூறும் நாவன்மையும்; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று-தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம். 'இன்றியமையாத முன்று, எனவே, முன்பு அமைச்சர்க்குக்கூறப் பட்ட பிறவிலக்கணங்களும் வேண்டு மென்பது பெறப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மன்னரிடம் நிறைந்த அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்து சொல்லும் வன்மையும் எனத் தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
6 சாலமன் பாப்பையா
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.
7 கலைஞர் மு.கருணாநிதி
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.
8 சிவயோகி சிவக்குமார்
அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு முக்கியமான மூன்று.
More Kurals from தூது
அதிகாரம் 69: Kurals 681 - 690