அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.
Transliteration
anpin vizhaiyaar poruLvizhaiyum aaidhotiyaar
insol izhukkuth tharum.
🌐 English Translation
English Couplet
Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.
Explanation
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
2 மணக்குடவர்
அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
3 பரிமேலழகர்
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்- ஒருவனை அன்புபற்றி விரும்பாமற் பொருள் பற்றி விரும்பும் அழகிய வளையலணிந்த விலைமகளிர்; இன்சொல்- தாம் கருதிய பொருள் பெறுமட்டும் தாம் அன்பு கனிந்தவராகக் கூறும் இனிய சொல்; இழுக்குத் தரும்-அன்று இன்பந்தருவதுபோல் தோன்றினும் பின்பு துன்பத்தையே விளைவிக்கும். 'ஆய்தொடி' , 'இன்சொல்' என்பன ஆடவருள்ளத்தைக் கவரும் கருவிகளுள் இரண்டைக் குறித்தன.'பொருள்விழையும்' ஐந்தாம் வேற்றுமைத்தொகை.ஆய்தொடி ஆராய்ந்தெடுத்ததொடி; வினைத்தொகை.
5 சாலமன் பாப்பையா
அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
7 சிவயோகி சிவக்குமார்
அன்பினால் விரும்பி நாடமல் பொருளுக்காய் நாட்டம் கொள்ளும் ஆய்தொடியாரின் (விலைமாதரின்) இனிய சொற்கள் இழிவைத்தரும்.
8 புலியூர்க் கேசிகன்
அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்.
More Kurals from வரைவின்மகளிர்
அதிகாரம் 92: Kurals 911 - 920