Kural 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRindhaatrich seykiRpaaRku allaal vinaidhaan
siRandhaanendru EvaRpaaR Randru.

🌐 English Translation

English Couplet

No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.

Explanation

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

2 மணக்குடவர்

செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூறுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்யவல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடையானென்று பிறனொருவனையேவும் இயல்புடைத்தன்று.

3 பரிமேலழகர்

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. ('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று. 'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தொழியினைத் தக்கபடி ஆராய்ந்தறிந்து முடிவு செய்ய வல்லவனையல்லாமல், 'இனி நம்மிடத்தில் அன்பு உள்ளவன்' என்ற காரணத்தினால் தொழிலின்மேல் ஒருவனை அமர்த்தும் தன்மை கூடாது.

6 சாலமன் பாப்பையா

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

8 சிவயோகி சிவக்குமார்

எப்படி என்பதை அறிந்து ஆற்றலுடன் செயல்படுபவருக்கு அல்லாமல் செயல்படுவதில் மட்டுமே சிறந்தவனை தூண்டக்கூடாது.

More Kurals from தெரிந்துவினையாடல்

அதிகாரம் 52: Kurals 511 - 520

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature