Kural 842

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRivilaan nenjuvandhu eedhal piRidhiyaadhum
illai peRuvaan thavam.

🌐 English Translation

English Couplet

The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.

Explanation

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

2 மணக்குடவர்

அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

3 பரிமேலழகர்

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல்-புல்லறிவாளன் ஒருவனுக்கு ஒருபொருளை மனமகிழ்ந்து கொடுத்தல் நேரின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை--அதற்குக் கரணியம் பெறுகின்றவன் செய்த முன்னை நல்வினையே யன்றி வேறொன்றுமன்று. புல்லறிவாளரும் ஏதேனுமொரு சமையம் பிறர்க்கு நெஞ்சாரக் கொடுத்துதவுகின்றனரே யெனின், அவ்வுதவி பெறுகின்றவர் அவ்வுதவியைத் தம்முன்னை நல்வினைப் பயனாகக் கண்டெடுத்த பொருள்போற் பெறுகின்றனரேயன்றி, அப்புல்லறிவாளர் இயல்பான ஈகைத்தன்மையாலாவது இம்மைப் புகழும் மறுமை நல்வாழ்வும் நோக்கிய அறவினையாகவாவது அவ்வுதவியைச் செய்கின்றாரல்லர் எனக்கரணியங் காட்டியவாறு. நேரின், அதற்குக் கரணியம் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன.

5 சாலமன் பாப்பையா

அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

6 கலைஞர் மு.கருணாநிதி

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

அறிவு இல்லாதவர் மனம் விரும்பி கொடுப்பதற்கு காரணம் பெறுபவரின் தவத்தன்மையே அன்றி வேறு ஒரு காரணம் இல்லை.

8 புலியூர்க் கேசிகன்

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature