அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.
Transliteration
aruLodum anpodum vaaraap poruLaakkam
pullaar puraLa vidal.
🌐 English Translation
English Couplet
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.
Explanation
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
2 மணக்குடவர்
அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக. இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.
3 பரிமேலழகர்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. (அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்-குடிகளிடத்தும் தாம் கொள்ளும் அருளோடும் தம்மிடத்து அவர் கொள்ளும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தின் தேட்டத்தை; புல்லார் புரள விடல்-அரசர் மனத்தாலும் பொருந்தாமல் தானே நீங்க விடுக. 'அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்' குடிகளை வருத்தி அளவிறந்து கவர்வது. 'குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே ' (நீதி.29) குடிகளை வருத்தி அளவிறந்து கவர்வதால், குடிகள் கெடுவதோடு அரசனும் பயனடையான். "அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானு முண்ணான் உலகமுங் கெடுமே. " (புறம்.184) இனி, அமைச்சன் தன் அரசனுக்குத் தீயவழியிற் பொருள் தேடினாலும், பசுமட்கலமும் நீறும்போல அவ்வரசனும் பொருளும் ஒருங்கு கெடுவதாக ஆசிரியர் கூறினமையின், அரசன் தானே தீயவழியிற் பொருள் தேடின் அழிவது திண்ணம் என்பது சொல்லாமலே பெறப்படும். அதனால் புல்லார் என்றதனோடமையாது 'புரளவிடல்' என்றுங் கூறினார். அருளொடும் அன்பொடும் என்று பொதுப்படச் சொல்லியிருப்பதால், அரசனுங் குடிகளும் போன்றே பண்ணையாரும் பண்ணையாட்களும், தொழிற்சாலைத்தலைவரும் தொழிலாளிகளும், முறையே அருளொடும் அன்பொடும் நடந்து கொள்ள வேண்டுமென்பதும் பெறப்படும். தொழில் தலைவர் அருள் கூலிகொடுத்தலிலும் தொழிலாளர் அன்பு பணிசெய்தலிலும், வெளிப்படும். இங்ஙனமே பிறதுறைகளிலும். புல்லார் எதிர்மறை முற்றெச்சம்.
5 சாலமன் பாப்பையா
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.
6 கலைஞர் மு.கருணாநிதி
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
இயற்கையின் விருப்பமான அருளொடும், தீங்கு தராத அன்பொடும் கிடைக்காத பொருளின் ஆக்கத்தை முட்டாள்களே ஆள்வதற்கு விட்டுவிட வேண்டும்.
More Kurals from பொருள்செயல்வகை
அதிகாரம் 76: Kurals 751 - 760