Kural 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aruLveqki aatrin-kan nindraan poruLveqkip
pollaadha soozhak kedum.

🌐 English Translation

English Couplet

Though, grace desiring, he in virtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.

Explanation

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

2 மணக்குடவர்

அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

3 பரிமேலழகர்

அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன் , பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளைவிரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான். விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும் , இரப்போர்க்கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால் , இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம். ஆதலால் , இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்குநேர்தலின் , 'சூழக்கெடும்' என்றார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித் தீமையான வழிகளை நினைப்பானாகில் கெட்டுவிடுவான்.

6 சாலமன் பாப்பையா

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

7 கலைஞர் மு.கருணாநிதி

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

8 சிவயோகி சிவக்குமார்

அருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நின்றவர் பொருள் மீது வேட்கை கொண்டால் பொல்லாப்பு வந்து அருள் வாழ்வு அழியும்.

More Kurals from வெஃகாமை

அதிகாரம் 18: Kurals 171 - 180

Related Topics

Because you're reading about Non-Covetousness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature