Kural 565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

arunjevvi innaa mukaththaan perunjelvam
paeeykaN dannadhu udaiththu.

🌐 English Translation

English Couplet

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

Explanation

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

2 மணக்குடவர்

காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

3 பரிமேலழகர்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அருஞ் செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் -காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்டவர்க்கும் சுடுமுகத்தனாகவுமிருக்கும் அரசனின் பெருஞ்செல்வம்; பேய்கண்ட அன்னது உடைத்து-பூதங் காத்தாற் போன்ற தன்மையை உடையது. அரசன் செல்வம் குடிகட்குப்பயன் படாமையாலும் அண்டுதற்கிடமின்மையாலும் பேய்காத்தாற் போன்றதென்றார். செவ்வி பார்க்கத்தக்க செவ்வையான நிலை. அருமை-எளிதாய்க்கிட்டாமை. 'பேஎய்' இசைநிறை யளபெடை. செவ்வியருமையை அருஞ்செவ்வி யென்றது செய்யுள் நடை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காணமுடியாதவனாயும், கண்டால் கடிய முகத்தையுடைவனாகவும் இருக்கின்ற மன்னனுடைய செல்வம் பேயால் காணப்பட்டதொரு குற்றத்தினை உடையதாகும்.

6 சாலமன் பாப்பையா

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

அரிதாக கேட்டு இனிமை அற்று பார்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது.

More Kurals from வெருவந்தசெய்யாமை

அதிகாரம் 57: Kurals 561 - 570

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature