அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்.
Transliteration
atukki varinum azhivilaan utra
idukkaN idukkat padum.
🌐 English Translation
English Couplet
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.
Explanation
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
2 மணக்குடவர்
மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
3 பரிமேலழகர்
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அடுக்கி வரினும் - இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும்; அழிவு இலான் -மனங் கலங்காதவன்; உற்ற இடுக்கண் இடுக்கண் படும் -அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம். துன்பம் துன்பப்படும் என்பதில் ஆட்படையணி குறிப்பாக அமைந்துள்ளது. அடுக்குதல் என்பது ஒருவகைத் துன்பமும் பல வகைத்துன்பமும் தழுவும்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
இடைவிடாமல் துன்பங்கள் மேன்மேல் வந்தாலும், தன் மனத்தில் உள்ள கோட்பாட்டினை விடாதவனிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பப்படும்.
6 சாலமன் பாப்பையா
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
8 சிவயோகி சிவக்குமார்
அடுத்தடுத்து தொடர்ந்து வந்தாலும் அழிவற்றவர் பெற்ற துன்பம் துன்பப்பட்டு போகும்.
More Kurals from இடுக்கணழியாமை
அதிகாரம் 63: Kurals 621 - 630