அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.
Transliteration
azhalpoalum maalaikkuth thoodhaaki aayan
kuzhalpoalum kollum padai.
🌐 English Translation
English Couplet
The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.
Explanation
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
2 மணக்குடவர்
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஆயன் குழல்- முன்னெல்லாம் இனிதாய் ஒலித்த இடையன் புல்லாங் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி- இதுபோது தீப் போலச் சுடும் மாலைப் பொழுதிற்கு முன் தூதாக வந்து; கொல்லும் படை- என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமு மாயிற்று. முன்னரே வருகை யுணர்த்தலின் முன் தூதாயிற்று; கொல்லுந் தொழிலாற் படைக்கலமாயிற்று. தானே எரிக்கவல்ல மாலை இத்துணைக் கருவிகளையும் பெற்றால் என்னதான் செய்யா தென்பதாம். பின் னின்ற 'போலும்' உரையசை. இனி, ஆயன் குழல் போலுங் கொல்லும் படை மாலைக்குத் தூதாகி அழல் போலும் என்றுமாம்.
5 சாலமன் பாப்பையா
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
7 சிவயோகி சிவக்குமார்
கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன் குழல் போன்ற கொல்லும் படை.
8 புலியூர்க் கேசிகன்
நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே!
More Kurals from பொழுதுகண்டிரங்கல்
அதிகாரம் 123: Kurals 1221 - 1230