Kural 764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

azhivindri aRaipoagaa thaaki vazhivandha
van-ka Nadhuvae padai.

🌐 English Translation

English Couplet

That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

Explanation

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

2 மணக்குடவர்

கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.

3 பரிமேலழகர்

அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அழிவு இன்று-போரின் கண் தோல்வியடைதலின்றி; அறை போகா தாகி-பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப் படாததாய்; வழிவந்த வன்கணதுவே-தொன்று தொட்டுத் தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறத்தை யுடையதே; படை-சிறந்த படையாவது. மற வலிமையால் அழிவின்மையும் அரசன்மீ தன்பும் நாட்டுப்பற்றும் தன்மானமும், உயர்ந்த வொழுக்க முடைமையால் அறைபோகாமையும் விளைந்தன. "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளி ராதல் தகுமே மேனா ளுற்ற செறுவிற்கிவ டன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருந லுற்ற செருவிற்கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே. இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி யொருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே." என்னும் புறப்பாட்டும் (271), "கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி யெய்போற் கிடந்தானென் னேறு." என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளும், வழிவந்த வன்கண்மைத் திறத்தை விளக்கும். அது என்னும் சுட்டுப் பெயர் ஈறானபின்பும் தனித்து நின்றதுபோல் வகரவுடம்படுமெய் பெற்றது.

5 சாலமன் பாப்பையா

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

6 கலைஞர் மு.கருணாநிதி

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

7 சிவயோகி சிவக்குமார்

அழிவற்றதாகவும், அச்சமுடன் விலகாமலும், வந்த வேலையை கடிணமுடன் சாதிப்பதுவே படை.

More Kurals from படைமாட்சி

அதிகாரம் 77: Kurals 761 - 770

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature