Kural 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

azhukkaaRu avaavekuLi innaachchol naankum
izhukkaa iyandradhu aRam.

🌐 English Translation

English Couplet

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Explanation

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

2 மணக்குடவர்

மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

3 பரிமேலழகர்

அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்காறு - பிறராக்கம் பொறாமையும்; அவா - அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி - அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் - அது பற்றிவருங் கடுஞ்சொல்லும்; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி )

5 திருக்குறளார் வீ. முனிசாமி

பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நங்கும் விளக்கப்பட்டு நடைபெறுவதே அறமாகும்.

6 சாலமன் பாப்பையா

பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.

9 புலியூர்க் கேசிகன்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்.

More Kurals from அறன்வலியுறுத்தல்

அதிகாரம் 4: Kurals 31 - 40

Related Topics

Because you're reading about Ethics & Morality

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature