Kural 1099

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

Edhilaar poalap podhunhokku noakkudhal
kaadhalaar kaNNae uLa.

🌐 English Translation

English Couplet

The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes.

Explanation

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

2 மணக்குடவர்

அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

3 பரிமேலழகர்

(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(மதியுடம்பட்ட தோழி தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொது நோக்கால் நோக்குதல்; காதலார் கண்ணே உள- இவ்விரு காதலரிடத்தேயே உள்ளன. பொது நோக்கு யாவரையும் ஒரு தன்மைத்தாய் நோக்கும் நோக்கு. நோக்குவார் பன்மையாலும் நோக்க நுண்வேறுபாட்டாலும் நோக்குப் பலவாயிற்று.'நோக்குதல்' பால்பகாவஃறிணைப் பெயர் இருவரும் உள்ளத்துள் மகிழ்தலைத் தன் நுண்மதியாற் கண்டாளாதலின் 'காதலார்' என்றும், அதை வெளிப்படையாகக் காட்டாமையால் 'ஏதிலார் போல்' என்றும், கூறினாள்.ஏகாரம் பிரிநிலை. "ஏனல் காவல் இவளும் அல்லள் மான்வழி வருகுவன் இவனும் அல்லன் நரந்தங் கண்ணி யிவனோ டவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே நம்முன் நாணுவர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுவ கண்ணி னானே." (இறை.கள.8- ஆம் நூற்பாவுரை)

5 சாலமன் பாப்பையா

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

7 சிவயோகி சிவக்குமார்

எந்தவித உறவும் இல்லாதவர்கள் போல் பொதுவான பார்வை பார்ப்பது காதலர்கள் இடத்தில் உண்டு.

8 புலியூர்க் கேசிகன்

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும்.

More Kurals from குறிப்பறிதல் Love

அதிகாரம் 110: Kurals 1091 - 1100

Related Topics

Because you're reading about Reading Signs of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature