ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை.
Transliteration
eevaarkaN eNNundaam thoatram irandhukoaL
maevaar ilaaak kadai.
🌐 English Translation
English Couplet
What glory will there be to men of generous soul,
When none are found to love the askers' role?.
Explanation
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
2 மணக்குடவர்
இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.
3 பரிமேலழகர்
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் -கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; ஓர் ஏர் உடைத்து-இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம். கடனறிவார் இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்காத கடமையுணாச்சியாளார், உம்மை இழிவு சிறப்பு. 'ஏஎர்' இசைநிறையளபெடை . சுருங்கிய கண்ணும் மழுங்கிய முகமும் ஒடுங்கியவுடலும் வளைந்த முதுகும் தளர்ந்த நிலையும் இளிவந்த சொல்லுமின்றி, மிளிர்ந்த கண்ணும் மலர்ந்த முகமுங் கொண்டு ஏக்கழுத்துமாய் எக்களித்து நிற்கும் நிலையை 'ஏர்' என்றார்.இரந்துகோள் மேவார் இலாக்கடை-ஒருவரிடம் சென்று ஒரு பொருளையிரந்து பெறுதலை விரும்புவார் இல்லாவிடத்து ஈவார்க்கண் என் தோற்றம் உண்டாம்-அப்பொருளைக் கொடுப்பார்க்கு என்ன புகழுண்டாம்? ஓன்றுமில்லையே! கொள்வாரின்றிக் கொடுப்பாரில்லை. இரப்பாரின்றி ஈவாரில்லை. ஈகையின்றிப் புகழில்லை. ஆதலால், ஈவாரின் புகழுக்கு இரப்பாரே கரணியம் என்பதாம். 'தோற்றம்' ஆகுபொருளது, 'மேதல்' வினை உலக வழக்கில் மேவுதல் என வழங்கும். 'இலாஅ' இசைநிறையளபெடை. இவ்விரு குறளாலும் மக்கட் பண்பு வெளிப்பாட்டிற்கு இரப்பாரின் இன்றியமையாமை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.
6 கலைஞர் மு.கருணாநிதி
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
7 சிவயோகி சிவக்குமார்
கொடுப்பவற்கு என்ன மதிப்பு உண்டாகும் கேட்டுப் பெறுபவர் ஒருவரும் இல்லாது போனால்.
8 புலியூர்க் கேசிகன்
தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்!
More Kurals from இரவு
அதிகாரம் 106: Kurals 1051 - 1060
Related Topics
Because you're reading about Begging