Kural 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

enaivakaiyaan thaeRiyak kaNNum vinaivakaiyaan
vaeRaakum maandhar palar.

🌐 English Translation

English Couplet

Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!.

Explanation

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

2 மணக்குடவர்

எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.

3 பரிமேலழகர்

எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். (கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எனை வகையான் தேறியக் கண்ணும் - எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும் ; வினை வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் தன்மையால் தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர். ஒரு தனிப்பட்ட கொள்கையுடைய அரசியற் கட்சித்தலைவர் ஆளுநராக அமர்த்தப்பெறின் , அக்கட்சிக் கொள்கையை விட்டு விடுவதும் , நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்குவதும், தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசனால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசனைக் கவிழ்த்து விட்டுத் தாம் அரசராவதும் , இன்று நிகழ்வது போன்றே அன்றும் நிகழ்ந்தமையின் , 'வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்' என்றார் . தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல , பொருளின் அதிகாரச்சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்த ரியல்பாதலால் , எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் , சிறிது வேறு பட்டவிடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும் , இன்றியமையாதன வென்பதாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து தொழிலில் வைத்த பின்னும், அத்தொழிலின் தன்மையால் வேறுபாடும் மாந்தர் உலகத்தில் பலருண்டு.

6 சாலமன் பாப்பையா

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

8 சிவயோகி சிவக்குமார்

எத்தனை வகையில் தேர்ச்சிப் பெற்றவராக இருப்பினும் செயல்படும் வகையில் மாறுபடுகிறார்கள் மனிதர்கள் பலர்.

More Kurals from தெரிந்துவினையாடல்

அதிகாரம் 52: Kurals 511 - 520

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature