Kural 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

enhnhandri kondraarkkum uyvuNdaam uyvillai
seynhnhandri kondra makaRku.

🌐 English Translation

English Couplet

Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free.

Explanation

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

2 மணக்குடவர்

எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

3 பரிமேலழகர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை. பேரறக் கெடுப்புகளாவன, ஆவின் மடியறுத்தலும் குழவிகளையும் நிறை சூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும், இவை போல்வன பிறவுமாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

கடமையாகச் செய்ய வேண்டுவனவாகிய அவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.

6 சாலமன் பாப்பையா

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

8 சிவயோகி சிவக்குமார்

எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. முக்தி இல்லை தான் பெற்ற உதவியை மறந்தவருக்கு.

9 புலியூர்க் கேசிகன்

எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

More Kurals from செய்ந்நன்றி அறிதல்

அதிகாரம் 11: Kurals 101 - 110

Related Topics

Because you're reading about Gratitude

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature