Kural 910

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

eNsaerndha nenjath thitanutaiyaarkku eGnGnaandrum
peNsaerndhaam paedhaimai il.

🌐 English Translation

English Couplet

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.

Explanation

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

2 மணக்குடவர்

எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.

3 பரிமேலழகர்

எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும'¢ என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு;பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனைவியொடு கூடுதலாலேற்படும் பேதைமை ஒருகாலத்தும் உண்டாகாது. இவ்வுலகில் வாழ்வதற்கு எல்லாவகையிலும் இடந்தருவதால் செல்வம் இடனெனப்பட்டது. இடனில் பருவத்தும் (குறள்.218) என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. இளமைக் காலத்தையும் உள்ளடக்குமாறு 'எஞ்ஞான்றும்' என்றார். பேதைமையாவது விழைதல்,தாழ்தல், அஞ்சுதல், ஏவல் செய்தல், அறம் பொருள் கைவிடுதல் ஆகியவற்றிற்கு ஏதுவான அறியாமை, பெண்வழிச் சேறலால் ஏற்படுங் கேடுகளெல்லாம் இக்குறளால் தொகுத்துக் கூறப்பட்டன.

5 சாலமன் பாப்பையா

சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

6 கலைஞர் மு.கருணாநிதி

சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

நல்லெண்ணமும் மன உறுதியும் கொண்டவர்கள் இடத்தில் எக்காலத்திலும் பெண்மைக்கு அடி பணிந்தோம் என்ற அறியாமை இல்லை.

8 புலியூர்க் கேசிகன்

கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.

More Kurals from பெண்வழிச்சேறல்

அதிகாரம் 91: Kurals 901 - 910

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature