Kural 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

epporuLum Oraar thotaraarmaR RapporuLai
vittakkaal kaetka maRai.

🌐 English Translation

English Couplet

Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!.

Explanation

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

2 மணக்குடவர்

யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.

3 பரிமேலழகர்

மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மறை-அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள் பற்றிப் பேச்சு நிகழும்போது; எப்பொருளும் ஓரார்-அதில் எந்தப்பொருளையும் செவிசாய்த்து உற்றுக் கேளாமலும்; தொடரார்-அவனை அணுகி வினவாமலும் இருந்து; மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க-பின் அம்மறை பொருளை அடக்கிவையாது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக. தம்மைப் பற்றியதாயினும் என்பார் 'எப்பொருளும்' என்றார். 'ஓரார்.' 'தொடரார்' என்பன எதிர்மறை முற்றெச்சம். 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது; வினைமாற்றின்கண் வந்ததன்று.

5 சாலமன் பாப்பையா

ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

6 கலைஞர் மு.கருணாநிதி

பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

உயர்ந்தோர் எதைச் சொன்னாலும் தவிர்காமல், அதை தொடரச் சொல்லாமல், மற்ற ஒன்றை சொன்னாலும் விலகாமல் மறை போல் கேட்க வேண்டும்.

More Kurals from மன்னரைச் சேர்ந்தொழுதல்

அதிகாரம் 70: Kurals 691 - 700

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature