எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
Transliteration
ezhumai ezhupiRappum uLLuvar thangaN
vizhumanh thutaiththavar natpu.
🌐 English Translation
English Couplet
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
Explanation
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
2 மணக்குடவர்
தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.
3 பரிமேலழகர்
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்-ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர். எழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின், ஏழேழ் மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண். நீக்கின வினையின் விரைவும் நிறைவுந் தோன்றத் 'துடைத்தல்' என்றார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தமக்கு உண்டாகிய துன்பத்தினைப் போக்கியவருடைய நட்பினை எழுமையினையுடைய எழுபிறப்பிலும் பெரியோர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
6 சாலமன் பாப்பையா
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
8 சிவயோகி சிவக்குமார்
தோன்றும் அடுத்த பிறப்புக்கும் எண்ணுவர் தனக்கு வந்த துன்பத்தை அழித்தவரின் நட்பை.
9 புலியூர்க் கேசிகன்
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்.
More Kurals from செய்ந்நன்றி அறிதல்
அதிகாரம் 11: Kurals 101 - 110
Related Topics
Because you're reading about Gratitude