இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
Transliteration
idumpaikku idumpai paduppar idumpaikku
idumpai padaaa thavar.
🌐 English Translation
English Couplet
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
Explanation
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
2 மணக்குடவர்
துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
3 பரிமேலழகர்
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இடும்பைக்கு இடும்பை படாதவர்-துன்பம் வருங்கால் துன்பப் படாதவர்; இடும்பை படுப்பர் - அத்துன் பத்திற்கே துன்பஞ் செய்வர். துன்பத்தின் நோக்கமே வருத்துதலாதலின், அத்துன்பத்திற்கு வருந்தாதவர் அதன் நோக்கத்தைத் தோற்கடித்தலால் அத்துன்பத்தையே வருத்துவர் என்றார். இதனால் துன்பத்தால் தடையுறாது வினை இனிது முடியும் என்பதாம். இதில் வந்துள்ளது சொற்பொருட்பின்வரு நிலையணி. வருகின்ற இரு குறளிலும் துன்பம் துன்பப்படும் என்பதற்கு இவ்வாறே உரைக்க.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தொழில் செய்யும்போது இடையில் வந்த துன்பங்களுக்குத் துன்பப்படாதவர்கள், வந்த அத்துன்பங்களுக்குத் துன்பத்தினை உண்டாக்கி விடுவர்.
6 சாலமன் பாப்பையா
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
துன்பத்திற்கு துன்பம் தருவர் துன்பத்திற்கு துன்பப்படாதவர்.
More Kurals from இடுக்கணழியாமை
அதிகாரம் 63: Kurals 621 - 630