இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.
Transliteration
indri amaiyaach chiRappina aayinum
kundra varupa vidal.
🌐 English Translation
English Couplet
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.
Explanation
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
2 மணக்குடவர்
இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.
3 பரிமேலழகர்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத விடத்துத் தாம் வாழ முடியாத அளவு முதன்மை வாய்ந்தன வெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ்வதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யா தொழிக. அமையாமை உயிரொடு பொருந்தாமை; அஃதாவது, இறத்தல், குடிப்பிறப்பு என்பது அதிகார முறையால் வந்தது. "இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க வென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க வென்பதாம்." என்று பரிமேலழகர் இங்குக் கூறியிருப்பது பாராட்டத்தக்கதாம். அந்த அளவிற்கு வள்ளுவர் தமிழவறம் வடவர் ஆரிய வறத்தை வென்றிருப்பது கவனிக்கத் தக்கது. உம்மை உயர்வு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
6 கலைஞர் மு.கருணாநிதி
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
அத்தியாவசியமான சிறப்புகள் உடையது என்றாலும் அதை அற்பமான செயல் செய்து அடையக் கூடாது.
8 புலியூர்க் கேசிகன்
மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.
More Kurals from மானம்
அதிகாரம் 97: Kurals 961 - 970
Related Topics
Because you're reading about Honor & Dignity