Kural 1158

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

innaadhu inan-il-oor vaazhdhal adhaninum
innaadhu iniyaarp pirivu.

🌐 English Translation

English Couplet

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
'Tis sadder still to bid a friend beloved farewell.

Explanation

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

2 மணக்குடவர்

தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இனன் இல்லா ஊர் வாழ்தல் இன்னாது- மகளிர்க்குக் குறிப்பறிந் துதவும் உறவினர் போன்ற தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்தல் துன்பந்தருவதாம்; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது- இனி, தமக்கு இனிய காதலரை விட்டுப் பிரிவதோ, அதனினும் மிகத் துன்பந் தருவதாம். தலைவனைச் செலவழுங்குவியாது செலவுடம்பட்டு வந்தமை பற்றித் தோழியொடு புலக்கின்றாளாதலின், 'இனனில்லூர்' என்றாள். இருவகைத் துன்பமுந் தனக்குண்மையை உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு.

5 சாலமன் பாப்பையா

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

6 கலைஞர் மு.கருணாநிதி

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

7 சிவயோகி சிவக்குமார்

துன்பமானது இசைவு இல்லாத ஊரில் வாழ்வது அதனினும் துன்பாமனது இனிமையானவரின் பிரிவு.

8 புலியூர்க் கேசிகன்

தோழியவர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

More Kurals from பிரிவாற்றாமை

அதிகாரம் 116: Kurals 1151 - 1160

Related Topics

Because you're reading about Pain of Separation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature