Kural 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

innaasey thaarai oRuththal avarnhaaNa
nannayanhj seydhu vidal.

🌐 English Translation

English Couplet

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.

Explanation

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

2 மணக்குடவர்

இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.

3 பரிமேலழகர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இன்னா செய்தாரை ஒறுத்தல்- தமக்குத்தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் நாண நல் நயம் செய்து விடல்- அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம். பிறர் செய்த தீமைகளையும் தாம் செய்த நன்மையையும் நினைப்பின் மீண்டுந் தளிர்க்கு மாதலின் முற்றும் மறக்கற் பாலன வாயின.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும்.

6 சாலமன் பாப்பையா

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

7 கலைஞர் மு.கருணாநிதி

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

8 சிவயோகி சிவக்குமார்

துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.

More Kurals from இன்னாசெய்யாமை

அதிகாரம் 32: Kurals 311 - 320

Related Topics

Because you're reading about Non-Violence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature