இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.
Transliteration
innaasey thaarkkum iniyavae seyyaakkaal
enna payaththadhoa saalpu.
🌐 English Translation
English Couplet
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.
Explanation
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
2 மணக்குடவர்
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.
3 பரிமேலழகர்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்குத் தீயன செய்தவர்க்கும் நல்லனவே செய்யாவிடின்; சால்பு என்ன பயத்தது - ஒருவரின் சான்றாண்மையால் என்ன பயனாம் ? வினா எதிர்மறைப் பொருளது, 'ஒ' இரக்கங் குறித்த அசைநிலை. உம்மை இழிவு சிறப்பு. ஏகாரம் பிரிநிலை, சால்பில்லார் போன்றே சால்புடையாரும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வராயின், அவர் சால்பினால் ஒரு பயனுமில்லை யென்பதாம். இவ்வைங் குறளாலும் சால்பின் தன்மை சிறப்பு வகையாற் கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.
6 கலைஞர் மு.கருணாநிதி
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.
7 சிவயோகி சிவக்குமார்
துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?
8 புலியூர்க் கேசிகன்
தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ?
More Kurals from சான்றாண்மை
அதிகாரம் 99: Kurals 981 - 990
Related Topics
Because you're reading about Nobility