இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
Transliteration
inpam idaiyaRaa theeNdum avaavennum
thunpaththuL thunpanG ketin.
🌐 English Translation
English Couplet
When dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows.
Explanation
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
2 மணக்குடவர்
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.
3 பரிமேலழகர்
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது - அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமன்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்ற விடத்தும் இன்பம் இடைவிடாது தொடரும். துன்பத்துள் துன்பமாவது, பிறதுன்பங்களெல்லாந் துன்பமாகத் தோன்றாவாறு பொறுக்குந்தன்மை யற்ற துன்பம். அவாவினாலுண்டாகுந் துன்பத்தை அவாவென்னுந் துன்பமென்று கரணகத்தைக் கருமகமாகச்சார்த்திக் கூறினார். பரம்பொருளொடு உள்ளத்தாற் கூடுதலே பேரின்பமாகலின், அவாவறுத்து அங்ஙனஞ் செய்தார் உடம்போடு கூடிநின்றவிடத்தும் அவ்வின்பந்துய்ப்பர் என்பது இங்குக் கூறப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
அவா என்று கூறப்படுகின்ற மிகுதியான துன்பம் ஒருவனுக்குக் கெடுமானால், அவனுக்குப் பேரின்ப வீடு பெற்ற வழியேயன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையீடின்றி வந்துகொண்டே இருக்கும்.
6 சாலமன் பாப்பையா
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
8 சிவயோகி சிவக்குமார்
இன்பம் தடைப் படாது நீளும், ஆசை என்ற துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால்.
More Kurals from அவாவறுத்தல்
அதிகாரம் 37: Kurals 361 - 370
Related Topics
Because you're reading about Overcoming Desire