Kural 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

insolaal eeram aLai-ip patiRuilavaam
semporuL kaNtaarvaaich chol.

🌐 English Translation

English Couplet

Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.

Explanation

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

2 மணக்குடவர்

ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?.

3 பரிமேலழகர்

[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.) இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள். 'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலாதவைகளாகி அன்போடு கலந்து சொல்லுகின்ற சொற்கள், இன்சொற்கள் எனப்படுவதாகும்.

6 சாலமன் பாப்பையா

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

7 கலைஞர் மு.கருணாநிதி

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

மகிழ்வான வார்த்தையால் ஈரம் பெருகும், பொய்மை இன்றி உண்மையை அறிந்தவர்களின் வாய் சொல்.

9 புலியூர்க் கேசிகன்

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

More Kurals from இனியவைகூறல்

அதிகாரம் 10: Kurals 91 - 100

Related Topics

Because you're reading about Pleasant Speech

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature