Kural 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

iRandha vekuLiyin theedhae siRandha
uvakai makizhchchiyiR soarvu.

🌐 English Translation

English Couplet

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.

Explanation

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

2 மணக்குடவர்

மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

3 பரிமேலழகர்

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு - மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அள விறந்த எரிசினத்திலும் தீயதாம். சிறந்தவுவகை பெருஞ்செல்வம் , இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது . அளவான வெகுளி பகைவரை யொடுக்குதற்கும் கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவதாம். அளவிறந்த வெகுளி ஒருகால் கடும்பகைவரைக் கொல்ல உதவலாம். ஆயின், வினைச் சோர்வு தன்னையே கொல்லுதலால் அதனினுந் தீயதாயிற்று.

5 சாலமன் பாப்பையா

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

6 கலைஞர் மு.கருணாநிதி

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

7 சிவயோகி சிவக்குமார்

அழிந்துவிடும் வெகுளியைவிடத் தீமையானது சிறந்த உவகையால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு சோர்ந்து செயல்கள் சரிவர செய்யாதது.

More Kurals from பொச்சாவாமை

அதிகாரம் 54: Kurals 531 - 540

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature