Kural 690

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

iRudhi payappinum enjaadhu iRaivaRku
uRudhi payappadhaam thoodhu.

🌐 English Translation

English Couplet

Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.

Explanation

He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

2 மணக்குடவர்

தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

3 பரிமேலழகர்

இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இறுதி பயப்பினும் - தான் கூறுஞ்செய்தியால் தன் உயிரிழக்க நேரினும் எஞ்சாது - அஞ்சி விட்டு விடாது; இறைவற்கு உறுதி பயப்பது - தன் அரசன் சொல்லியவாறே வேற்றரசரிடம் செய்தியைச் சொல்லித் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே; தூது ஆம் -சரியான தூதனாவன். உம்மை உயர்வு சிறப்பு. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது. அதிகமானுக்குத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் வகுத்துரைப்பார் வகையினராயினும், இறுதிபயப்பினும் உறுதி பயக்கும் தூதிற்கு, அவர் பாடிய "இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன் காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ என்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயின் உடனுண்ணும் இல்லோ ரொக்கல் தலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே." (புறம். 95) என்னும் பாட்டுச் சிறந்த எடுத்துக் காட்டாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தன் உயிர்க்கு முடிவினைத் தருவதாக இருந்தாலும் அதற்கு அஞ்சாமல் தனது தலைவன் சொல்லியபடியே வேற்று அரசனுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லுபவனே தூதனாவான்.

6 சாலமன் பாப்பையா

தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

8 சிவயோகி சிவக்குமார்

இயற்கையின் இறுதிப் பயன் உடனே கிடைப்பினும் எந்தக்குறையும் இல்லாமல் தன் மன்னனின் நிலையை உறுதிப்பட உரைப்பதே தூது.

More Kurals from தூது

அதிகாரம் 69: Kurals 681 - 690

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature