Kural 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

izhaththoRu-um kaadhalikkum soodhaepoal thunpam
uzhaththoru-um kaadhatru uyir.

🌐 English Translation

English Couplet

Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.

Explanation

As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

2 மணக்குடவர்

பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.

3 பரிமேலழகர்

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல்-பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை மீட்டற் பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின் மேற்பற்று வைக்குஞ் சூதன்போன்றே; உயிர் துன்பம் உழத்தொறும் காதற்று-ஆதன்(ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங்களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மையதாம். உயிர்வினையை உவமமாகவும் சூதன் வினையைப் பொருளாகவுங் கூறுவதே அதிகார முறையாயினும், முன்னதன் முதன்மை பற்றி மாற்றிக் கூறினார். இங்ஙனம் இருவகைக் காதலையுங் கூறியது பெரும்பான்மைபற்றியாகலின், உடம்பை வெறுத்துத் துறவுபூணுவதும் சூதை வெறுத்து நல்வழிப்படுத்துவதும் சிறுபான்மை யுண்டென வறிக. துன்பப்படுந்தொறும் உடம்பின்மேற் பற்றுவைப்பது எதிர்காலத்திலேனும் இன்பநுகரலாம் என்னும் நம்பாசைபற்றி. 'தொறூஉம்' ஈரிடத்தும் இன்னிசையளபெடை. 'சூது' ஆகு பொருளது; உயிருக் கொத்தவன் சூதனேயாதலின். சூதன் சூதாடுவோன். ஏகாரம் பிரிநிலை.

5 சாலமன் பாப்பையா

துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.

7 சிவயோகி சிவக்குமார்

இழந்தாலும் காதலிக்கும் சூதினைப் போல் துன்பம் சூழ்ந்தால் காதலிக்காது உயிர். (சூது தற்கொலைக்கு வழி வகுக்கும்)

8 புலியூர்க் கேசிகன்

இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.

More Kurals from சூது

அதிகாரம் 94: Kurals 931 - 940

Related Topics

Because you're reading about Gambling

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature