Kural 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai
vaayin adhuvoppadhu il.

🌐 English Translation

English Couplet

Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

Explanation

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

2 மணக்குடவர்

யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

3 பரிமேலழகர்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. (வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை. செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்ய வேண்டுமாதலின் யார்மாட்டும் என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் 'என்றும்' என்றும் , எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் வழுக்காமை என்றும் , கூறினார் . 'வாய்' என்னும் வினை 'வாய்ந்தன ரென்ப' (தொல். 1582) , 'வாய்ந்தமலையும்' ( குறள் . 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும் , செயப்படு பொருள் குன்றிய வினையாதலாலும் , 'வாயி' னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினை யெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மறவாமைக்குணம் யாவரிடத்திலும் எக்காலத்திலும் இடையீடின்றி உண்டாகி விடுமானால், அதனையொத்த நன்மை வேறு எதுவும் இல்லை.

6 சாலமன் பாப்பையா

எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

8 சிவயோகி சிவக்குமார்

நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்க்கு ஒப்பானது இல்லை.

More Kurals from பொச்சாவாமை

அதிகாரம் 54: Kurals 531 - 540

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature