Kural 1211

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaadhalar thoodhodu vandha kanavinukku
yaadhusey vaenkol virundhu.

🌐 English Translation

English Couplet

It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.

Explanation

Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

2 மணக்குடவர்

நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.

3 பரிமேலழகர்

[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .] (தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகனிடமிருந்து தூதுவரக் கண்டாள் சொல்லியது.) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துதலறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டு வந்து காட்டிய கனவிற்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக நான் எதனைச் செய்வேன்! விருந்து என்னுஞ்சொல் விருந்தாளையும் விருந்துணவையுங் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. கனவிற்குப் படைப்பதொன்றின்மையின், 'யாது செய்வேன்' என்றாள். 'கொல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

7 சிவயோகி சிவக்குமார்

காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.

8 புலியூர்க் கேசிகன்

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!

More Kurals from கனவுநிலையுரைத்தல்

அதிகாரம் 122: Kurals 1211 - 1220

Related Topics

Because you're reading about Dreams of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature