காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.
Transliteration
kaamam uzhandhu varundhinaarkku Emam
matalalladhu illai vali.
🌐 English Translation
English Couplet
To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.
Explanation
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
2 மணக்குடவர்
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
3 பரிமேலழகர்
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது . ) காமம் உழந்து வருந்தினார்க்கு - பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு ; ஏம மடல் அல்லது வலி இல்லை - தொன்று தொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றமன்றி வேறொரு வலிமையு மில்லை . ஏமமாதல் அத்துன்பம் நீங்குமாறு அந்நுகர்ச்சியை மீளத்தருதல் , பண்டைநாளிலும் என்போன்ற ஆடவர் இம்முறையே கையாண்டு வந்திருக்கவும் , நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன் . இன்று நீ எனக்குத் துணையல்லாமையை அறிந்தேனாதலின் , அவ்வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றாவாறு .வலி, ஆகு பொருளது . மடலேறும் வகை வருமாறு :- தன் காதலியைப் பெறாத காதலன் ஆடைகளைந்து நீர்ச்சீலையணிந்து , உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி , எருக்கமாலை யணிந்து , தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையிலேந்திக் கொண்டு , அதையே நோக்கி , அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன் . அவ்வூர்த்தலைவர் அவனைக் கண்டு காதலாய்விற்கு அவன் உடம்பட்டபின் , அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிலைமேலேற்றிப் பெருந் தெருவூடிழுத்துச் செல்வர் . கருக்குப் பட்ட விட மெல்லாம் அரத்தந் தோன்றாது விந்து நீர் தோன்றின் , அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர் ; இன்றேல் வையார் . இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்து கால வழக்காதலின் , தமிழிலக்கியத்திற் குறித்திருப்பதெல்லாம் அதை நினைவுறுத்தலேயன்றி வேறன்றென்க .
5 சாலமன் பாப்பையா
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
காமம் பழகி பின் ஒரு காரணத்தால் வருந்தும் ஒருவருக்கு பாதுகாப்பு பணிமுறை முடங்கல் இன்றி வலி தீராது.
8 புலியூர்க் கேசிகன்
காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை.
More Kurals from நாணுத்துறவுரைத்தல்
அதிகாரம் 114: Kurals 1131 - 1140