கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.
Transliteration
kallaa thavarin kadaiyenpa katraRindhum
nallaa ravaiyanju vaar.
🌐 English Translation
English Couplet
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.
Explanation
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
2 மணக்குடவர்
கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார். இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.
3 பரிமேலழகர்
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் -நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்திருந்தும், நல்ல அறிஞரவைக்கு அஞ்சி அங்கு அவற்றை எடுத்துக் கூற மாட்டாதார்; கல்லாதவரின் கடை என்ப - கல்லாதவரினுங் கடைப்பட்டவர் என்பர் அறிஞர். கற்றோர் தம் கல்வியைக் பிறர்க்கு எடுத்துச் சொல்வதனாற் பொருள்வகையாலும் புகழ்வகையாலும் தாமும் பயன்பெறுவராதலின், அதைச் சொல்லாமையால் தாமும் பயன்பெறாது பிறரையும் பயன்பெறுவிக்காது தம் கல்வி முயற்சியை வீணாக்குவதால், கல்லாத வரினுங் கடைப்பட்டவ ரென்று உலகம் பழிக்கும் என்றார். 'நல்லார்' என்பது நன்மை செய்வார் என்பதைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது.
5 சாலமன் பாப்பையா
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள் கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.
More Kurals from அவையஞ்சாமை
அதிகாரம் 73: Kurals 721 - 730