கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
Transliteration
kallaadha maeRkoN tozhukal kasadaRa
valladhooum aiyam tharum.
🌐 English Translation
English Couplet
If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.
Explanation
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
2 மணக்குடவர்
தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.
3 பரிமேலழகர்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல்-புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையுங் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல்;கசடு அற வல்லதும் ஐயம் தரும்-அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை யுண்டு பண்ணும். 'கசடு' ஐயந்திரிபு குறைவுகள். குறைவாவது , பாம்பைப் பாம்பென்றறிந்தும் உயிருள்ளதா செத்ததா என்றும் , நச்சுப்பாம்பா நற்பாம்பா என்றும், பிறவாறு நிறைவுற அறியாமை. 'ஐயம்' இவர் தேர்ச்சி பெற்றதாகச் சொல்லப்பெறும் துறையறிவும் இத்தகையதுதானோ எனக் கருதுதல். 'வல்லதூஉம்' இன்னிசையளபெடை. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
5 சாலமன் பாப்பையா
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
கல்லாமலேயே ஒன்றை நடைமுறை செய்வதால், குற்றம் இல்லாமல் கற்றதையும் ஐயப்படச் செய்துவிடும்.
8 புலியூர்க் கேசிகன்
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.
More Kurals from புல்லறிவாண்மை
அதிகாரம் 85: Kurals 841 - 850
Related Topics
Because you're reading about Petty Mindedness