கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண்.
Transliteration
kaNdaar uyiruNNum thoatraththaal peNtakaip
paedhaikku amarththana kaN.
🌐 English Translation
English Couplet
In sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife!.
Explanation
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
2 மணக்குடவர்
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்டன்மையுடைய இப்பேதைமையாளுக் குள்ள கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடியனவா யிருந்தன. இனி அமர்த்தல் மாறுபடுதல் என்றுகொண்டு கண்கள் பெண்டன்மையொடும் பேதைன்மையொடும் பொருந்தாது மாறுபட்டிருந்தன எனினுமாம். 'கண்' பால்பகா அஃறிணைப்பெயர் பேதையென்னுஞ்சொல் இங்குப் பருவங்குறியாது இளமை குறித்து நின்றது.
5 சாலமன் பாப்பையா
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
6 கலைஞர் மு.கருணாநிதி
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.
7 சிவயோகி சிவக்குமார்
பார்ப்பவரின் உயிரை உண்ணும் தோற்றமுடன் பெண்ணாகிய பேதைக்கு அமர்ந்திருக்கின்றது கண்.
8 புலியூர்க் கேசிகன்
தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே!
More Kurals from தகையணங்குறுத்தல்
அதிகாரம் 109: Kurals 1081 - 1090
Related Topics
Because you're reading about Beauty & Attraction