கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.
Transliteration
kannin thuniththae kalanginaal pulludhal
enninum thaanvidhup putru.
🌐 English Translation
English Couplet
Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own.
Explanation
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
2 மணக்குடவர்
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள். கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.
5 சாலமன் பாப்பையா
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.
6 கலைஞர் மு.கருணாநிதி
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
7 சிவயோகி சிவக்குமார்
கண்ணில் ஆறுபோல் கலக்கமாகி இருந்தாலும் வெட்டிக் கொள்ளாமல் என்னைவிட விரைந்து பற்றிக்கொண்டாள்.
8 புலியூர்க் கேசிகன்
கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.
More Kurals from புணர்ச்சிவிதும்பல்
அதிகாரம் 129: Kurals 1281 - 1290