Kural 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaNNuLLaar kaadha lavaraakak kaNNum
ezhudhaem karappaakku aRindhu.

🌐 English Translation

English Couplet

My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

Explanation

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

2 மணக்குடவர்

எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

காதலர் கண் உள்ளாராக - எம் காதலர் எப்போதும் எம் கண்ணுள் ளிருக்கின்றாராதலால் ; கரப்பாக்கு அறிந்து - அவர் மறைவதையறிந்து ; கண்ணும் எழுதேம் - கண்ணிற்கு மையிடுதலுஞ் செய்யேம் . இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம் . ' கரப்பாக்கு ' தொழிற்பெயர் . ' பாக்கு ' தொழிற்பெயரீறு . இழிவு சிறப்பும்மை இடமாற்றப்பட்டது .

5 சாலமன் பாப்பையா

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

7 சிவயோகி சிவக்குமார்

கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.

8 புலியூர்க் கேசிகன்

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

More Kurals from காதற்சிறப்புரைத்தல்

அதிகாரம் 113: Kurals 1121 - 1130

Related Topics

Because you're reading about Excellence of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature