Kural 1011

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

karumaththaal naaNudhal naaNunh thirunhudhal
nallavar naaNup piRa.

🌐 English Translation

English Couplet

To shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame.

Explanation

True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

2 மணக்குடவர்

தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

3 பரிமேலழகர்

நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். ('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்' என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நாணுக் கருமத்தால் நாணுதல் -நன்மக்கள் நாணுவது தீய வினைகள் செய்ய வெட்கிப் பின் வாங்குதல்; பிற திருநுதல் நல்லவர் நாணு - அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல் , அறியாத ஆடவரொடு உரையாடல், ஆடவருள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப் படுதலும் கூச்சப் படுதலும் , அழகிய நெற்றியையுடைய குலமகளிர்க்கேயுரிய நாண்களாம். 'திருநுதல் நல்லவர்' என்பது பாராட்டுப் பற்றிய புகழ்ச்சிச் சொல். பிற ' திருநுதல் நல்லவர் நாணு' என்றதனால் ஏனையது நன்மக்கள் நாண் என்பதும், ' நாணுதல் ' என்றதனால் கருமத்தின் இழிவும் பெறப்பட்டன. நாணும் வினைப்பன்மை பற்றிப் 'பிற ' என்றார் இக்குறளின் பிற்பகுதிக்கு, "அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடு ஒக்கும் என்றவாறு". என்றுரைத்தார் மணக்குடவர். இனி அற்றமறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோ டொக்குமென்றுரைப்பாரு முளர். அவர்க்கு நாண் கேடு பயக்குமென விலக்கப்படாமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும் , அஃதுரையன்மை அறிக. என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. இதனால் நாணின் இலக்கணங் கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

7 சிவயோகி சிவக்குமார்

செயல்களுக்காக வெட்கப்படுதல் என்ற நாணுதல் அவசியமானது. அழகிய நெற்றி பெற்ற பெண்கள் நாணுவதும் நல்லவர்கள் நாணுவதும் வெவ்வேறு தன்மையுடையது.

8 புலியூர்க் கேசிகன்

இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம்; பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும்.

More Kurals from நாணுடைமை

அதிகாரம் 102: Kurals 1011 - 1020

Related Topics

Because you're reading about Modesty

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature