Kural 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

katindha katindhoraar seydhaarkku avaidhaam
mutindhaalum peezhai tharum.

🌐 English Translation

English Couplet

To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.

Explanation

The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

2 மணக்குடவர்

நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

3 பரிமேலழகர்

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச்செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்- அவ்வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும். முடிதல் வெற்றியாய் முடிந்து கருதிய பொருள் தருதல். ஒருவார் என்பது ஒரார் எனக்குறைந்து நின்றது. 'முடிந்தாலும்' ஐயவும்மை பீழைதருவன வினையும் வினையால் வந்த பொருளும்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

நூலோர் தீயவை யென்று நீக்கிய தொழில்களைப் பொருள் கருதி நீக்காமல் செய்த அமைச்சர்க்கு அவை ஒருவகையில் முடிந்தாலும் துன்பத்தினையே தரும்.

6 சாலமன் பாப்பையா

வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

8 சிவயோகி சிவக்குமார்

வெறுக்கப்பட்டதை வெறுக்காமல் ஏற்று செய்தவருக்கு அச்செயல் முடிவு பெற்றாலும் பெருந்துன்பமே விளையும்.

More Kurals from வினைத்தூய்மை

அதிகாரம் 66: Kurals 651 - 660

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature