Kural 390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kodaiyaLi sengoal kudiyoampal naankum
udaiyaanaam vaendhark koLi.

🌐 English Translation

English Couplet

Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.

Explanation

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

2 மணக்குடவர்

கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம். கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.

3 பரிமேலழகர்

செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம். (தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கொடை - தகுதியுடையவர்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி -யாவரிடத்தும் அன்பாயிருத்தலும், செங்கோல்-நேர்மையான ஆட்சியும்; குடி ஒம்பல்-தளர்ந்த குடிகளைப் பேணுதலும்; நான்கும் உடையான்-ஆகிய இந்தான்கு செயலையும் உடையவன்; வேந்தர்க்கு ஒளிஆம் - அரசரெல்லார்க்கும் விளக்காம். அன்பாயிருத்தல் அகமுக மலர்ந்து இனிய கூறல். 'செங்கோல் உவமையாகுபெயர். குடியென்று விதந்து கூறியது பஞ்சம், வெள்ளம், கொள்ளை, கொள்ளைநோய் முதலியவற்றால் தளர்ந்த குடிகளை அவர்களைப்பேணுதலாவது வரிநீக்கலும்வேண்டிய பொருளுதவலும் ஒளிபோல் வழிகாட்டுதலின் ஒளி யென்றார். 'ஒளி' ஆகு பெயர். மேல் 'ஈகை' என்றது ஆட்சியும் போர்வினையும் பற்றியதென்றும், இங்குக் 'கொடை' என்றது அறமுங்கலைவளர்ச்சியும் பற்றியதென்றும், வேறு பாடறிக.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.

6 சாலமன் பாப்பையா

தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

7 கலைஞர் மு.கருணாநிதி

நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் - விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தால், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும் உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.

More Kurals from இறைமாட்சி

அதிகாரம் 39: Kurals 381 - 390

Related Topics

Because you're reading about Qualities of a Ruler

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature