கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
Transliteration
kolaimaeRkoN taariR kotidhae alaimaeRkondu
allavai seydhozhukum vaendhu.
🌐 English Translation
English Couplet
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.
Explanation
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
2 மணக்குடவர்
கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.
3 பரிமேலழகர்
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . வேந்து - பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறையல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன் ; கொலை மேற்கொண்டாரின் கொடிதே - பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண் டொழுகுவாரினுங் கொடியனேயாவன் . சிறிது பொழுதே செய்யுங்கொலைத்துன்பத்தினும் எப்பொழுதும் செய்யும் அலைத்துன்பங் கொடிது என்பதாம் . 'வேந்து' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணையாதலின் அஃறிணை முடிபு கொண்டது . ஏகாரம் தேற்றம் .
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பொருளைக் கருத்தி நீதியற்ற முறையில் குடிமக்களிடம் அல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன், கொலை செய்யும் தொழிலை மேற்கொண்டவர்களைவிடவும் கொடியவனாவான்.
6 சாலமன் பாப்பையா
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.
7 கலைஞர் மு.கருணாநிதி
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
கொலை செய்வதையே தொழிலாக கொண்டவரை விட கொடுமையானது, அலைப்போல் தொடர்ந்து அர்த்தமற்ற செயல்களைச் செய்யும் ஆட்சியாளர்களின் ஆட்சி.
More Kurals from கொடுங்கோன்மை
அதிகாரம் 56: Kurals 551 - 560
Related Topics
Because you're reading about Cruel Rule