Kural 1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kootramoa kaNNoa piNaiyoa madavaral
noakkamim moondrum udaiththu.

🌐 English Translation

English Couplet

The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
Or fawn's shy glance? All three appear In form of maiden here.

Explanation

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

2 மணக்குடவர்

கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது. (இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இதுவுமது கூற்றமோ - என்னைக் கொல்வதுபோல வருத்துவதாற் காலனோ; பிணையோ - இடையிடை மருண்டு பார்ப்பதாற் பெண்மானோ; கண்ணோ - இவ்விரு தன்மையும் இல்லாது சில வேளைகளிலிருப்பதால் இயல்பான மாந்தக்கண்தானோ; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இப்பெண்ணின் பார்வை இம்மூவகைத் தன்மையும் உடையதாயிருக்கின்றது. மேற்கூறிய கொல்லுத் தன்மையோடு வேறிரு தன்மைகளும் உடைமை இங்குக் கூறப்பட்டது. 'கூற்றம்' 'கண்' 'பிணை' என்னும் மூன்றும் ஆகு பொருளன. 'மடவரல்' ஆகுபெயர். இதில் வந்துள்ள அணி ஐயவுவமை.

5 சாலமன் பாப்பையா

என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

7 சிவயோகி சிவக்குமார்

அழிக்கும் எமனோ? வசியம் செய்யும் கண்ணோ? அடிமைப்படுத்தும் பிணையோ? கன்னியின் நோக்கம் இம் முன்றும் இணைந்தே இருக்கிறது.

8 புலியூர்க் கேசிகன்

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே!

More Kurals from தகையணங்குறுத்தல்

அதிகாரம் 109: Kurals 1081 - 1090

Related Topics

Because you're reading about Beauty & Attraction

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature