மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
Transliteration
matimai kutimaikkaN thangindhan onnaarkku
atimai pukuththi vidum.
🌐 English Translation
English Couplet
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
Explanation
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
2 மணக்குடவர்
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
3 பரிமேலழகர்
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மடிமை குடிமைக்கண் தங்கின் -சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் -அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும். மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக் கேட்டை. குடிமை குடிசெய்யுந்தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை , ' தன்னொன்னார்க்கு ' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச் செல்வம் ,இன்பம் , அறிவு , ஒழுக்கம் , ஆட்சி ,வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச்செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மடியானது நற்குடியில் பிறந்தவனிடத்தில் இருந்துவிடுமானால், அது அவனைத் தன்னுடைய பகைவர்களுக்கு அடிமையாகும் தன்மையினை உண்டாக்கிவிடும்.
6 சாலமன் பாப்பையா
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
8 சிவயோகி சிவக்குமார்
சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.
More Kurals from மடியின்மை
அதிகாரம் 61: Kurals 601 - 610