Kural 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

munnuRak kaavaadhu izhukkiyaan thanpizhai
pinnooRu iRangi vidum.

🌐 English Translation

English Couplet

To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

Explanation

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

2 மணக்குடவர்

தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.

3 பரிமேலழகர்

முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான். காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.

5 சாலமன் பாப்பையா

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.

More Kurals from பொச்சாவாமை

அதிகாரம் 54: Kurals 531 - 540

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature