Kural 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

muraNsaerndha moimpi navarkkum araNsaerndhaam
aakkam palavunh tharum.

🌐 English Translation

English Couplet

Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.

Explanation

Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

2 மணக்குடவர்

பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் ; அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்ததனாலுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும் . மாறுபாடாவது மாநிலம் எல்லார்க்கும் பொதுவென்னும் பகைவர் சொல்லைப் பொறாத அரசர் மனத்திலெழும் வயிரம் . மாறுபாடும் வலியும் ஒருங்கே கூறியதனால் , இது பகைமேற்சென்ற வல்லரசர் செயலாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு . அரண் , ஆறும் மலையும் போல் இயற்கையும் , அகழியும் மதிலும் போற் செயற்கையும் ஆக இருவகைப்படும் . ஆக்கம் வலிமேம்பாடு . அது தரும் நலங்கள் பகைவரால் தமக்குத் தாக்குதலின்மையும் தாம் நிலையூன்றி அவரைத்தாக்கி வெல்லுதலுமாம் .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மாறுபாட்டுடன் கூடிய மனத்தினையுடைய வலிமை நிறைந்த அரசர்க்கு அரனைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பற்பல பயன்களைக் கொடுப்பதாகும்.

6 சாலமன் பாப்பையா

பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

முரண்பாடு உடைய கூட்டத்தை அடைந்தவருக்கும் நல்ல இடம் அமைந்தால் நன்மைகள் பல கிடைக்கும்.

More Kurals from இடனறிதல்

அதிகாரம் 50: Kurals 491 - 500

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature