Kural 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

muyangiya kaikalai ookkap pasandhadhu
paindhotip paedhai nudhal.

🌐 English Translation

English Couplet

One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.

Explanation

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

2 மணக்குடவர்

யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.

3 பரிமேலழகர்

(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[வினைமுடித்து மீளுந் தலைமகன் முன்னிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.] முயங்கிய கைகளை ஊக்க- தன்னை யிறுகக்கட்டித் தழுவிய கைகளை இவட்கு நோமென்று கருதி ஒரு சிறிது தளர்த்தேனாக; பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது- அதற்குள், அச்சிறு தளர்ச்சியையும் பொறாது, பசும்பொன் வளையல்களை யணிந்த என் இளங்காதலியின் நெற்றி பசலை பாய்ந்துவிட்டது. அத்தகைய மெல்லியல் நெற்றி இப்பிரிவிற்கு யாதாகுமோ! இனிக் கடுகிச் செல்லவேண்டுமென்பது கருத்து.

5 சாலமன் பாப்பையா

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.

6 கலைஞர் மு.கருணாநிதி

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

7 சிவயோகி சிவக்குமார்

உறவுக் கொண்ட கைகளால் தடவ பசந்தது பழைய வளையல்கள் அணிந்த இளம்பெண் நெற்றி.

8 புலியூர்க் கேசிகன்

தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே!

More Kurals from உறுப்புநலனழிதல்

அதிகாரம் 124: Kurals 1231 - 1240

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature